ஆழவேரோடிய மேதகு வே.பிரபாகரன் சிந்தனையும் அதனை வேரறுக்க நினைக்கும் சிறிலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பும் (srilanka interligence service)
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவ வழிநடத்தலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்கள் புனிதமானவர்கள், சக்திவாய்ந்தவர்கள், விடுதலைப் பாதையில் வரும் சவால்களையும், தடைக்கற்களையும் அகற்றக்கூடிய அற்புதமான வல்லமை பொருந்தியவர்கள். அத்தகைய வீரவான்களை உரிமை கோரி வெளிப்படுத்தும் வீரவணக்க நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னும் வீச்சாக்கும் செயற்திறன் கொண்டது.
தேசியத் தலைவரின் சிந்தனை என்னும் தமிழீழக்கோட்பாட்டுச் சித்தாந்தமும், மாவீரர்களின் சக்தியும் இணைந்து எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றது. காலம் விட்ட வழியில் செல்லாமல் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை காட்டும் விடுதலைப் பாதையில் நாங்கள் செல்கிறோம். அது கடினமான பாதைதான், சவால்கள், பேராபத்துக்கள் நிறைந்தது என்பதையும் நாம் அறிவோம்.
ஆனால் அதைவிட சரியான தெரிவு தமிழீழத் தமிழர்களிற்கு கிடையாது.
எனவேதான் இந்த கரடுமுரடான, ஆபத்தான பாதையை நாம் தொடர்ந்தும் விடுதலைப் பயணம் செய்கின்றோம். அன்பானவர்களே! சிறிலங்கா பேரினவாத அரசு எமது தமிழீழச் சித்தாந்தத்தை வேரோடு அழிப்பதற்காக கடுமையான புலனாய்வுச் சதி வலைப்பின்னல்களை உருவாக்கி வேலை செய்து வருகிறது. இந்த மாயவலைக்குள் சில தேசிய செயற்பாட்டாளர்கள் உண்மை புரியாது, உணர்வு மேலீட்டினால் சிக்குண்டு போயிருப்பது வேதனையான விடயம்.
ஆனால் அவர்கள் தவறானவர்களோ, துரோகிகளோ கிடையாது. அவர்களையும் இந்தப் புலனாய்வுச் சதியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது. எமது பொறுப்புமாகும்.ஒரு விடுதலைப் போராட்டம் நெருக்கடிக்கு உள்ளாகி சிதைக்கப்படும்போது இவ்வாறான நெருக்கடியான நிலைமைகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
அது தன்னை மீள்கட்டமைக்கும்போது பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும் இதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டமும் விதிவிலக்கானது அல்ல. ஆனால் எம்மிடம் மேதகு பிரபாகரன் சிந்தனை என்னும் தமிழீழக்கோட்டாட்டுச் சித்தாந்தம் மிகவும் பலம்வாய்ந்ததாகவும் கலங்கரைவிளக்கமாகவும் உள்ளது. அதனை அழிப்பதற்காகவே எதிரிகள் பொய்ப் புரட்டுகளையும், தவறான கற்பனைக்கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். நிச்சயமாக இதிலிருந்து நாம் மீண்டெழுவோம்.
33 ஆண்டுகால ஆயுதப்போராட்டம் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் அந்தக் காலகட்டத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழித்தடத்தை, வரலாறுகளை, முடிவுகளை ஆராய்ந்து பார்ப்பதன் ஊடாக எது சரி, எது பிழை, எது உண்மை, எது போலி என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். விழிப்பே விடுதலையின் முதற்படி
-அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி-






