செம்மணியில் ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூட்டு தொகுதிகள நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவை நேற்று (30) முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், செம்மணியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணிப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 25 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 115 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 102 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.






