ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான செல்வகுமார் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை யூட் நிலக்ஸன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் வீதியின் இரு மருங்கிலும் ஒளியேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அருட்தந்தை யூட் நிலக்ஸன் அவர்களினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய செல்வகுமார்,
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர் இளையதம்பி செல்வகுமார் உரையாற்றினார். இந்த கோரத் தாக்குதலில் 225 இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.






