ஒஸ்லோ:
பிரான்ஸ் தேசிய சபை, குணப்படுத்த முடியாத தீவிர நோயால் அவதிப்படும் சில நோயாளிகளுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் “உதவியுடன் கூடிய தற்கொலைக்கு (Assisted Suicide)” அனுமதிக்கும் வரைபை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளது. இந்த வரைபுக்கு, 291 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 241 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
புதிய சட்டத்தின்படி, பிரான்ஸ் குடிமக்கள் அல்லது சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இருக்கும் வயது வந்தோர், குணப்படுத்த முடியாத, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத உடல் அல்லது மன வேதனையை அனுபவித்து, தாங்களாகவே சுய விருப்பத்துடன் முடிவெடுக்கக் கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே இந்த நடைமுறைக்கு தகுதி பெறுவார்கள்.
பெரும்பாலும் உயிரை முடிக்கும் மருந்தை நோயாளியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, உடல் இயலாமை ஏற்பட்டால் மட்டும் மருத்துவர் அல்லது செவிலியர் உதவ அனுமதிக்கப்பட்டு, குறிப்பிட்ட நோயாளி தற்கொலை செய்வதற்கான அனுமதியை இவ்வரைபு வழங்குகிறது.
இந்த வரைபு, பிரான்சில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த அறநெறி, மருத்துவ மற்றும் அரசியல் விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இது நடைமுறைக்கு வருவதற்கு முன் அரசியலமைப்பு கவுன்சிலின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
16.07.2026






