செங்கடலில் ஹூத்தி குழு நடத்திய சமீபத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2023 முதல் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுத் தாக்குதல்கள் மூலம் சுமார் 70 வணிகக் கப்பல்களை ஹூத்தி குழு தாக்கி உள்ளது. அதில் 4 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. குறைந்தது ஏழு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுடன் தொடர்புடையதாக தாங்கள் நம்பும் கப்பல்களை தாக்குவதாக ஹூத்தி குழு கூறுகிறது.
ஹூத்திகள், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினர் என்பதுடன், காஸாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொலாவுடன் இணைந்து “எதிர்ப்பு அச்சின்” ஓர் அங்கமாக உள்ளனர்.
ஏமனின் ஷியா இஸ்லாமிய சிறுபான்மையினரான ஜைதிகளை ஆதரிக்கும் ஆயுதமேந்திய அரசியல் மற்றும் மதக் குழுதான் ஹூத்தி.
அவர்கள், மத்திய கிழக்கில் ஹமாஸ், ஹெஸ்பொலா உள்ளிட்ட பிற ஆயுதக் குழுக்களோடு இணைந்து இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பரந்த மேற்கு உலகுக்கு எதிரான இரான் தலைமையிலான “எதிர்ப்பின் அச்சு” இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.






