யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (05) மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அங்கு காணப்பட்ட சர்ச்சைக்குரிய சவப்பெட்டி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது.
அந்த சவப்பெட்டிக்குள் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு காணப்பட்டதுடன், அதிலிருந்து கைக்காப்பு மற்றும் நாணயக் குற்றிகள் உள்ளிட்ட சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 5 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, குறித்த புதைகுழியில் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் சேர்த்து, அங்கிருந்து இதுவரை முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






