தமிழனாய் சினம் கொள்! அடிமை மனிதா!

You are currently viewing தமிழனாய் சினம் கொள்! அடிமை மனிதா!

தமிழனாய் சினம் கொள்!

உன் தாய்நாட்டையும்
உன் தன்மானத்தையும்
இன்னொருவன்
இரையாக்கும் பொழுது
உள்ளேயோ வெளியேயோ
நீ சினம் கொள்ளவேண்டும்!
உனக்கு சினம் வரவில்லை என்றால்
நீ ஒரு பிணத்திற்கு சமம்!
அப்படித்தான்
இனத்தின் மீதான காதலும்
இருக்கவேண்டும்!
கண்ணுக்கு முன்னால்
எம்மினம் கொத்துக்கொத்தாக
அழிக்கப்பட்டு
பிணக்குவியல்களாக
புதைக்கப்பட்டும்
தன்னினக்காதல்
தன்மானத்தையும்
இனமானத்தையும்
எட்டவில்லையென்றால்
எப்படி
தமிழன் எனும்
அடையாளத்தோடு
உலாவ முடியும்!
அழித்தவனோடு
பல்லிழித்து போறவன்
சொல்லிலும்
செயலிலும்
கொள்கை வகுக்காதவன்!
சேற்றிலே உழக்கும்
பன்றிக்கு சமமானவன்!
இனத்தின் இன்னலைக்
கண்டு சற்றும்
கலங்காதவன்!
சுயநல வியாபாரியாய்
சுயலாபம் காண
நினைப்பவன்!
நலிந்த அரசியலும்
மெலிந்த சிந்தனையும்
கொண்டவன்!
மண்டியிட்டு மண்டியிட்டு
பிடரி நிமிர்த்த முடியாதவன்!
ஆனால்
உண்மையான தமிழனாக
இருந்தால்
குருதியில் ஏறிய உணர்வு
குலையாமல்
இருக்கவேண்டும்!
அக்கா தங்கையரை
கயவன் அறுத்துப்போட்டதை
நெஞ்சில் நெருப்பாய்
ஏற்றவேண்டும்!
குழந்தைகளை
குண்டுகள் போட்டு சிதைத்து
சின்னா பின்னமாக்கியதை
சிரசில் இருத்தவேண்டும்!
என்று தணியும்
எங்களின் தாகம்
எனும் கோசம்
இதயத்துடிப்பின்
சுவாசமாய்
எப்போதும்
இருக்கவேண்டும்!
-தூயவன்-
பகிர்ந்துகொள்ள

Leave a Reply