வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!

You are currently viewing வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!

கிளிநொச்சி – வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கு என சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது,

“எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளிலும், மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை, பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகு சமூகத்திற்காக) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

எனவே, முதற்கட்டமாக காணியற்ற நிலையில் தவித்து வரும் இந்த ஏழை குடும்பங்களுக்கு அந்த காணிகளைப் பகிர்ந்தளித்து, அவர்களுக்கான போக்குவரத்து வீதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களின் இந்த அத்தியாவசியத் தேவையையும், வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு, உரிய அதிகாரிகள் மூலம் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply