ஆண்தாய்க்கு அகவை 65

You are currently viewing ஆண்தாய்க்கு அகவை 65

வங்கக் கடல்க்காற்று வகிடெடுக்கும்
வல்வைக்கடலோரம்
எங்கள் சிறுத்தைத் தலைவன்
மலர்ந்தான்!
பொங்குமா கடல் அலையின்
பெரும் சிரிப்பில்
எங்கள் தங்கத்தலைவன்
நிமிர்ந்தான்!

இன்னலிடை வீழ்ந்த
இனத்தின் காவலனாய்
அனல் கக்கும் சூரியனாய்
தமிழ்வானிலே எழுந்தான்!
சிங்களச் சேனைகளின் திமிரடக்கும்
விடங்கொண்ட வேங்கையாய்
தமிழ்நிலமெங்கும் பாய்ந்தான்!

முப்படை கட்டிய முதல்வனாய்
தமிழ்ப்படை திரட்டி
தமிழீழமெங்கணும்
தனிவரலாறு படைத்தான்!
கப்பலோட்டிய தமிழனின் வித்தையெல்லாம் திரட்டி
கடற்காப்பிற்காய் கடல்ப்புலிகளை
கட்டினான்!

நெறிபுரளா தலைவனின் அறநெறி வழுவா திறன் கண்டு
ஆயிரமாயிரமாய் மாவீரர்
மறத்தமிழ் களம் வென்றார்!
கொண்ட கொள்கையில் குறிதவறா
கொள்கைவீரனை
கோடிகோடியாய் விலை பேச
அரசியல் வியாபாரிகள்
வந்தார்!
அண்டமே அசைக்கமுடியா
மண்பற்றுக் கொண்ட
மகாதலைவனைக் கண்டு
வந்தவர் வியந்தார்!

மண் விடுதலைக்காய்
தன் குடும்பத்தை தியாகம் செய்த
ஒப்பற்ற தலைவன்
மண் தொட்ட மகத்தான
நாளின்று!
அப்பழுக்கற்ற ஆண்தாயாகி
அன்புக்கரம் நீட்டி
ஆண்டாண்டு காலமாய் கை கட்டி
நின்ற
தன் இனமக்களை அரவணைத்து
அற்புதம் நிகழ்த்திய
அறத்தின் நாளின்று!
உலகத்தில் வாழும்
ஒட்டுமொத்த தமிழினத்திற்கும்
தரணியில் முகவரி எழுதிய
சரித்திரநாளும்
தமிழர் நிமிர்ந்த நாளும்
தலைவர் பிறந்த நாளே!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள