ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இரண்டு இலங்கை படகுகள்!

You are currently viewing ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இரண்டு இலங்கை படகுகள்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவை படகில் நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 9ம் தேதி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது ஆஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இவர்களின் படகு இடைமறிக்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் படகில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. 

அதே போல், ஆஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் ஆஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மொத்தம் இரண்டு படகுகள் இடைமறிக்கப்பட்டு, இலங்கை அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் இலங்கையின் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

“ஆட்கடத்தல்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். “(தொழிற்கட்சி ஆட்சி வந்தால்) இதுதான் நடக்கும் என்று கூறினோம், அது நடக்கிறது,” எனக் கூறியிருக்கிறார் தாராளவாத தேசிய கூட்டணி ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக இருந்த கரேன் ஆண்டூருஸ். 

“சட்டவிரோத படகு வருகைகளை எவ்வாறு நிர்வகிக்க போகிறது என அல்பனீஸ் (தொழிற்கட்சி) அரசாங்கம் உடனடியாக விளக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும்,” என முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ் குறிப்பிட்டிருக்கிறார். 

அதே சமயம், படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments