இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது வங்காளதேசம்!

  • Post author:
You are currently viewing இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது வங்காளதேசம்!

முதல் முறையாக இளையோருக்கான உலகக் கோப்பையை கைப்பற்றியது வங்கதேசம். மூன்று இலக்குகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலகக்கோப்பை துடுப்பாட்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. வங்கதேச அணி, நியூசிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இளையோருக்கான உலக கோப்பை துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. உலகக்கோப்பை இளையோருக்கான துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 47.2 பந்து பரிமாற்றங்களில் 177 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.

இந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

இந்திய அணி 25 பந்து பரிமாற்றங்களில் ஒரு இலக்குக்கு 80 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியின் ஜெயிஸ்வால் 44 ஓட்டங்களும், திலக் வர்மா 28 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

அதன் பின் தொடர்ந்து இலக்குகளை பறிகொடுத்தது இந்திய அணி.

இறுதியாக 47.2 பந்து பரிமாற்றங்களில் 177 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடியது..

ஏழு இலக்குகளை பறிகொடுத்து 163 ஓட்டங்களை வங்க தேசம் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் ‘டக் வொர்த் லூவிஸ்’ (Duckworth–Lewis)முறைப்படி வெற்றி இலக்கு 170 ஓட்டங்களாக நிர்ணயக்கப்பட்டது.

மூன்று இலக்குகள் மிச்சமிருந்த நிலையில் 42.1 பந்து பரிமாற்றங்களில் வெற்றி இலக்கை எட்டியது வங்கதேசம்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் ஏற்கனவே இளையோருக்கான உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய இளையோர் அணி இதுவரையில் 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் முதல்முதலாக உலகக் கோப்பையை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள