இந்தியா – சீனா எல்லைப் பதற்றம் ; போராக மாறுமா?

  • Post author:
You are currently viewing இந்தியா – சீனா எல்லைப் பதற்றம் ; போராக மாறுமா?

இந்தியா சீனா இடையிலான எல்லையான லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனா தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையை ஒட்டி இரு நாட்டு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய ராணுவத் தளபதி கூறியிருந்த நிலையில் இப்போது திடீரென உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோதல் நடந்திருக்கின்றது. சூழ்நிலை மேலும் மோசமாகுமோ, பெரிய மோதல் வெடிக்குமோ என்ற ஐயம் பலருக்கும் நிலவுகின்றது.

எனவே இது குறித்து மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறியதாவது:-

இது பெரிய மோதலாக மாறாது. உயர் மட்டத்தில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் மட்டத்தில் புரிதல் இருக்கிறது. இரு தரப்பிலும் ராணுவத்தினர் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும்.

இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) வரையறுக்கப்படவில்லை. அதனால், ராணுவங்கள் முன்னேறுவதும், பின் வாங்குவதுமாகத் தொடர்கிறது. இதனால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுகின்றது.

ஆனால், பல விஷயங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. பொய்யான கணிப்புகள் வெளியாகி இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வரும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

ராஜீவ் காந்தி – டெங் ஜியாவோ பிங் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்திய சீன உறவில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. “1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றார். அந்தப் பயணத்தில் நானும் சென்றிருந்தேன்.

அங்கு ராஜீவ் காந்தி – சீனத் தலைவர் டெங் ஜியாவோ பிங் இடையிலான பேச்சுவார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுவரை நிலவி வந்த தேக்க நிலையை உடைப்பதாக அந்த முடிவுகள் அமைந்தன.

அதாவது எல்லைப் பிரசசினையில் தீர்வு எட்டும் வரை உறவில் மேம்பாடு இல்லை என்று இருந்த நிலையை மாற்றி, எல்லைப் பிரச்சினை முடியும் வரை காத்திருக்காமல் உறவுகளை மேம்படுத்தவேண்டும் என்பது அந்த சந்திப்பில் எட்டிய முடிவுகளில் ஒன்று.

இரு நாடுகளும் எல்லையில் படை பலத்தை பிரயோகிப்பதில்லை என்பதும், எல்லையில் இருக்கும் நிலையை மாற்றுவதில்லை என்பதும் அப்போது எடுத்த முடிவுகள்தான்.

இந்தியாவில் அப்போது முதல் நரேந்திர மோடி வரையிலான எல்லாப் பிரதமர்களும் அந்தப் பேச்சுவார்த்தை உருவாக்கிய கட்டமைப்புக்கு உட்பட்டே செயல்பட்டும், உறவை வளர்த்தும் வந்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சிறிய விஷயங்கள், கேந்திர விவகாரத் துறை வட்டாரங்களால் மிகைப்படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகின்றன.

சிறிய நாடுகள் பல கொரோனா சிக்கலை சமாளிக்கும் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், பெரிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினையை சிறப்பாக சமாளித்த நாடு சீனா என்பது உண்மைதான்.ஆனால், இதனால் ஏற்பட்ட சாதக நிலையை, இந்திய எல்லை விவகாரத்தில் பயன்படுத்திக்கொள்ள சீனா முயலாது. அதற்கு வாய்ப்பில்லை. இப்போது ஏற்பட்டுள்ள பதற்றம், இழுபறியாக இருக்கும் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கான அழுத்தத்தைத் தராது. நம் வாழ்நாளில் இந்த எல்லைப் பிரச்சினை தீர்வதை நாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே என கூறினார்

பகிர்ந்துகொள்ள