இனத்திற்காக எந்த விலையை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்!!

You are currently viewing இனத்திற்காக எந்த விலையை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்!!

ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற நிலையில் ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மற்றொரு சந்திப்பொன்று நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் ரெலோவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுடன் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது இனத்தை அழிக்க நினைக்கின்ற அரசாங்கத்திற்கு ஒரு பலமான சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலே தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இரண்டாவது முறையில் நாங்கள் விடுபட்ட தரப்புகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் . அதைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.ஏனையவர்கள் கலந்துகொள்ளவில்லை.

நாங்கள் இதன்பிரகாரம் இந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய பின்னர் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு கூட்டான பலமான அமைப்பாக செயல்படுவதற்கு ஒரு முடிவை எடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் அடுத்து வரும் நாட்களிலேயே நாங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி இறுதியாக ஒரே குடையின் கீழ் ஒரே கூட்டாக செயற்படுவதற்கான ஒரு முடிவை நாங்கள் எடுக்க இருக்கின்றோம்.

உண்மையிலேயே எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம். அந்த வகையிலே நாங்கள் மீண்டும் அந்த கட்சித் தலைவர்களிடம் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து நேரே சென்று அவர்களுடன் பேசி அவர்களை இந்த பலமான ஒற்றுமைக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நாங்கள் கொண்டு வருவோம். நாங்கள் சி.வி விக்னேஸ்வரன் தரப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். விக்னேஸ்வரன் மற்றும் அவருடன் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் நாங்கள் மீண்டும் அவர்களை சந்திக்க இருக்கின்றோம். அவர்களை சந்தித்து ஒற்றுமை தொடர்பில் பலமான கூட்டாக செயற்படுவதற்கு முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம். அவர்களும் அதற்கு விரும்புவார்கள் .

அந்தவகையில் ஒற்றுமையை உருவாக்கி ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய எதிர்ப்பை நாங்கள் தடுக்க வேண்டும். எங்களுடைய இனத்திற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். சர்வதேசத்தில் எங்களுடைய சார்பாக பல நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.அந்த வகையிலே இந்த ஒற்றுமை பலம் சேர்க்கும் வகையில் அமையும் என்பதை நான் கூறுகின்றேன்.

புலம்பெயர்ந்த உறவுகளை இணைத்து இந்தியாவிலேயே உள்ள தமிழ்நாட்டு தமிழர்களை இணைத்து இதனை நாங்கள் பலமான சக்தியாக காட்டவேண்டும். அது காலத்தின் கட்டாயம் .

புளொட் மற்றும் ரெலோவுக்கு நாடாளுமன்றில் நேரம் ஒதுக்குவது சம்பந்தமாக கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்து இருந்தீர்கள் .அதே நிலையில் தான் தற்போதும் உள்ளீர்களா என்று கேட்டபோது,

ஒற்றுமைக்காக நாங்கள் சில விஷயங்களை தவிர்த்து வருகிறோம். இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியிலே சில கேள்விகள் ஏற்படுகிறது. பிரச்சனைகள் இருக்கின்றது. ஆனால் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த பலம் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் பிரச்சினை இருக்கின்றது ஆனால் பேசித் தீர்க்க வேண்டும். பேசி தீர்க்கலாம் என்ற வகையிலே ஒற்றுமை என்பது மிக முக்கியம்.பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அதனை தீர்க்காத பட்சத்தில் முடிவுகளை எட்ட வேண்டும்.

ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது. ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகள் எங்களுடைய தேசத்தில் மிகத் துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை முறியடிப்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டாயம்.

அரசாங்கம் மிக மோசமான செயற்பாட்டை செய்கின்றது. எங்களுடைய கடற்பரப்பில் கப்பல் தாழ்ந்ததன் பின்பு எங்களுடைய கடல் பரப்பிலேயே மிக மோசமான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது .ஆமைகள் திமிங்கலங்கள் உயிர் இழந்து கரையொதுங்கி வருகின்றன . மீனவ சமூகம் பெரிய பிரச்சனைகள் கண்டு கொண்டு இருக்கின்றது. அந்த வகையிலே அது தவிர்க்கப்பட வேண்டும்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments