இனி பெற்றோர்களும்,ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்!!

You are currently viewing இனி பெற்றோர்களும்,ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்!!

நீட் தேர்வினால் அச்சமடைந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

நேற்று ஒரு நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தற்கொலை செய்து கொண்டனர்.  

நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.  தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.  பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.


இந்நிலையில் நடிகை சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுயில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது.ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக்கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றுலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது.

இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்ககூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத்தயார்ப்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும்.  அன்பு நிறைந்த குடும்பம், உறவு,நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு தேர்வர்களின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.

மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒரேநாளில் நீட் தேர்வு மூன்று மாணவர்களை கொன்று இருக்கிறது, இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும்.

அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல்
எழுப்புவோம்… வேதனையுடன் சூர்யா.

பகிர்ந்துகொள்ள