உடலில் மண்ணெண்ணை ஊற்றி போராட்டம்!

You are currently viewing உடலில் மண்ணெண்ணை ஊற்றி போராட்டம்!
உடலில் மண்ணெண்ணை ஊற்றி போராட்டம்! 1

வளத்தாப்பிட்டியில் உடம்பில் மண்ணெண்யை ஊற்றி தீப்பெட்டியுடன் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம் செய்துள்ளார்.

தனக்கு அரசினால் வீடு வழங்கப்படவேண்டும் எனக் கோரி மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையொருவர் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீப்பெட்டியுடன் மின்கம்பத்தில் ஏறி சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தினார்.

இச்சம்பவம் அம்பாறையை அடுத்துள்ள வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் நேற்று முந்தினம் (10)மாலை இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த சண்முகம் சந்திரகுமார்(வயது40) என்பவரே இவ்விதம் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தினை மேற்கொண்டவராவார்.

சம்மாந்துறைப் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத் சம்மாந்துறை பிரதேசெயலக கணக்காளர் பாரீஸ் சமுர்த்தி தலைமை அலுவலக அதிகாரி சலீம் கிராம சேவை உத்தியோகத்தர் கே.ரவி இராணுவம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அவரை இறக்குவதற்கு கடும் முயற்சிகளையும் பிரயத்தனைகளும் மேற்கொண்டனர்.

தனக்கு நீதி வேண்டும். அரச உத்தியோகத்தர்கள் கடமையை சரியாகச் செய்வேண்டும். தனக்கு ஓரு வீட்டினை அரசின் மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டும் அத்தோடு கிராம சேவகர் தனிப்பட்ட வீட்டில் அலுவலகத்தை அமைக்காமல் பொது இடத்தில் இருக்க வேண்டும் கிராம பொதுக் கட்டிடத்தில் கிராம சேவகர் மற்றும் சமூர்த்தி அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே தான் இறங்குவதாக மேலிருந்து கூறினார்.

எதற்கும் இறங்குங்கள் என்று கூறிய போதிலும் அவர் செவிசாய்க்கவில்லை. அதனிடையே அவரது மனைவி 3 பெண்பிள்ளைகள் கீழிருந்து அழுதவண்ணம் நின்றனர்.

பிரதான வீதி என்பதால் வாகனங்கள் சனக்கூட்டம் நிரம்பிவிட்டது. சம்மாந்துறை பிரதேசபையின் முன்னாள் உபதவிசாளரும் சு.கட்சி அமைப்பாளருமான வி.ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு முயற்சி யெடுத்தார்.

சுமார் 4மணியளவில் மின்கம்பத்தில் ஏறியவர் 7.15வரை அங்கிருந்து தமது கோரிக்கையை முன்வைத்து இறங்காமல் அடம்பிடித்தார்.

பழையவளத்தாப்பிட்டி ,பதிய வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் ,பழவெளி ஆகிய நான்கு கிராமங்களின் 1200 குடும்பங்களைக் கவனிக்கவேண்டிய கிராம உத்தியோகத்தர் கே.ரவியின் முயற்சியால் வீடு பெற்றுத்தருவதாக உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டம் இறுதிக்கட்டத்திற்கு வந்தது.

இறுதியில் தாம் கைப்பட எழுதி வீடுதருவதாக கிராமசேவை உத்தியோகத்தர் கி.ரவி உறுதியளித்தன் பேரில் 7.15மணியளவில் கீழிறங்கினார்.

கீழிறங்கியதும் வீடு ஒன்று சமுர்த்தி திட்டத்தின் கீழ் பெற்றுத்தருவதாக கடிதம் எழுதி சமுர்த்தி தலைமையக அதிகாரி சலீம் ஒப்பமிட்டு சாட்சிக்கு இருவர் ஒப்பிமிட்டுக் கொடுத்தபின்னர் அப்போராட்டம் முடிவுக்குவந்தது.

பகிர்ந்துகொள்ள