உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்!

  • Post author:
You are currently viewing உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்!

நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. அந்த வகையில் நம் உடலுக்கு பல வகைகளில் வலுவூட்டும் பேரிச்சம் பழம் குறித்து தெரிந்து கொள்வோம்..

பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரிச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரிச்சம்பழம்.

பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. நிறைய பேர் டயட்டில் இருக்கும்போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம்பழத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.

பேரிச்சம் பழத்தில் கார்போ ஹைட்ரேட் – 70-80 சதவீதம் உள்ளது. இதில் க்ளுகோஸ், ப்ரக்டோஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் (தாது உப்புகள்) மற்றும் பாலிபீனால்கள், பீனாலிக் அமிலம் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தாவர விளக்கம் (உள் அமைப்பு):-

பேரிச்சை பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம்.  இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை. எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஓவ்வோர் ஈர்க்கும் 30செ.மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும். இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

உற்பத்தி:- பேரிச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூவரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.

பேரிச்சை 100 கிராமில் உள்ள ஊட்டச்சத்து
ஆற்றல் – 280
சர்க்கரை-  63.35 கிராம்
நார்ப்பொருள் (உணவு) – 8கிராம்
கொழுப்பு – 0.39கிராம்
புரதம் – 2.45
நீர் – 20.53
தயமின் – 0.052 மி.கி – 4%
ரிபோஃபிளாவின்-0.066 மி.கி 4%
நியாசின்- 1.274 மி.கி 8%
பான்டோதெனிக் அமிலம்- 0.589 மி.கி -12%
உயிர்ச்சத்து பி6- 0.165 மி.கி 13%
இலைக்காடி- (உயிர்ச்சத்து பி9) -5%
உயிர்ச்சத்து ஈ- 0.05 மி.கி- 0%
உயிர்ச்சத்து சி- 0.4 மி.கி- 1%
உயிர்ச்சத்து கே-2.7மி.கி- 3%
கால்சியம்- 39 மி.கி- 4%
இரும்பு-1.02 மி.கி – 8%
மக்னீசியம்-43 மி.கி -12%
பாஸ்பரஸ்- 62 மி.கி-9%
பொட்டாசியம்- 656 மி.கி 14%
சோடியம்- 2 மி.கி -0%
துத்தநாகம் – 0.29 மி.கி-  3%

வகைகள்:- அஃபந்தீ, அஜ்வா,அன்பரா, பைள், பர்னீ, பர்ஹீ, கர், ஹல்வா, ஹில்யா, ஜீபைலீ, கஈகா, கலாஸ், குள்ரீ.

ஊட்டச்சத்துகள்:- பேரிச்சம் பழத்தில் கொழுப்புகள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.

பயன்கள் செரிமானம் சீராகும்:-  பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

சிறந்த ஆற்றல் கிடைக்கும்:- பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ் சுக்ரோஸ் மற்றும் ப்ருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:- பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 
பக்கவாதம் தடுக்கப்படும்:- ஆராய்ச்சியாளர்கள் பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிவித்துள்ளனர்.

எலும்புகளுக்கு சத்து:- பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித் தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

கண்களுக்கு ஊட்டம்:- ஓவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்பாட்டு கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

இரும்புச்சத்து:- இதில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது அப்பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மலச்சிக்கல்:- மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் பேரிச்சம்பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

எடையை அதிகரிக்கும்:- ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அது மட்டுமின்றி ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.
 

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்:- பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

கர்ப்பம்:- கர்ப்பிணிகளின் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும்போது, இதனை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

ஆண்மை சக்தி:- நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

ஒவ்வாமை:- நாம் சில குறிப்பிட்ட பொருட்களை சாப்பிடும் போதோ, சுவாசிக்கும் போதோ உடல் அதை ஏற்க முடியாமல் எதிர்வினையாற்றுவது ஒவ்வாமை எனப்படும். இந்த ஒவ்வாமை நபருக்கு நபர் வேறுபடும். பேரிச்சம் பழங்களை அதிகம் உண்டு வருபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.

போதை பழக்கம்:- இன்று பலரும் புகையிலை, சிகரெட், பீடி, மது போன்ற பல வகையான போதை வஸ்துக்களை அதிகம் உபயோகித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.

வயிற்று பிரச்சனைகள்:- கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, மாசடைந்த நீரை அருந்துவது மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படுகிறது. இந்த வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் 3 வேளை சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.

புற்றுநோய்:- பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைவதாக பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ரத்த சோகை நீங்கும்:- பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை ரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.

சளி இருமலுக்கு:- பேரிச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி இருமல் குணமாகும்.

வெண்குஷ்டம்:- பேரிச்சம்பழ சாறு குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

குழந்தைகளின் வயிற்றுபோக்கு:- பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுறும் போது பேரிச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

பகிர்ந்துகொள்ள