உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு இடமில்லை!

You are currently viewing உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு இடமில்லை!

உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன், அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேச நிறுவனங்களுக்கு ஒருபோதும் வழங்க முடியாது. அதற்கான தேவையும் எமக்கு கிடையாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச அமைப்புக்கள் மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தலையிட முடியாது என்பதை சர்வதேச நாடுகளும், சர்வதே அமைப்புக்களும் இம்முறை ஏற்றுக்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் இம்முறை இலங்கைக்கு சார்பாக அமைந்தது எனவும் குறிப்பிட்டார்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மனித குலத்திற்கு பொருத்தமற்ற வரையறைகளை ஒரு சில நாடுகள் இன்றும் செயற்படுத்தி வருகின்றன. இவ்விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்தவில்லை. மாறாக இலங்கை விவகாரத்திற்கு மாத்திரம் ஒவ்வொரு முறையும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

அனைத்து நாடுகளையும் சமமான முறையில் மதிப்பிடக்கூடாது. மக்கள் தொகை, செல்வ வளம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக்கொண்டு நாடுகள் வேறுப்படுத்த கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மூல கொள்கையாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த கொள்கை காலமாற்றத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளது. இலங்கைக்கு எதிராக சாட்சிகளை திரட்டுவதற்கு சர்வதேச அமைப்புக்கள் பெருமளவிலான நிதியை செலவிடுகின்றன.

சாட்சிகளை திரட்டுபவர்கள் யார்? அவர்கள் எக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது பகிரங்கப்படுத்தவில்லை. இலங்கைக்கு எதிராக சாட்சியம் திரட்டுவதற்கு செலவிடும் நிதியை வறுமை கோட்டில் உள்ள நாடுகளின் முன்னேற்றத்திற்காகவும், கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்கும் செலவு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதை சர்வதேச புலம்பெயர் அமைப்புக்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது என்பதை கடந்த வாரம் இடம்பெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரின் போது அணிசேரா நாடுகளும், அஸர்பைஜான், எகிப்து உள்ளிட்ட நாடுளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபை கூட்டம் இலங்கைக்கு சாதகமாக காணப்பட்டது. கூட்டத்தொடரின்போது பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.என்றும் அவர் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments