கனடா – பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் தீவைத்து அழிப்பு!

You are currently viewing கனடா – பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் தீவைத்து அழிப்பு!

கனடா – பிரிட்டிஷ்கொலம்பியா மாகாணத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் நேற்று சனிக்கிழமை தீவைத்து எரிக்கப்பட்டன.

மாகாணத்தில் கடந்த வாரம் பழங்குடி மக்களால் இரண்டு தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை காலை மேலும் இரண்டு தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென். ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயம் ஆகியவற்றுக்கு ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தீவைக்கப்பட்டது. இதில் இரண்டு தேவாலய கட்டடங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடா தேசிய பழங்குடி மக்கள் தினமான கடந்த திங்கட்கிழமை பிரிட்டிஷ்கொலம்பியாவில் பழங்குடி மக்கள் பகுதிகளில் உள்ள இரண்டு தேவாலயங்கள் தீவைத்து அழிக்கப்பட்டன. இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றபோதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மேலும் இரு தேவாலயங்கள் நேற்று தீக்கிரையாக்கப்பட்டன.

கடனாவில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட முன்னாள் இரண்டு பழங்குடி குடியிருப்பு பள்ளி புதைகுழிகளில் கிட்டத்தட்ட 1000 வரையான பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவங்களை அடுத்து பழங்குடி மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இவ்வாறான கண்டுபிடிப்புக்களின் விளைவாகவே கத்தோலிக்க தேவாலங்கள் பழங்குடி மக்களால் தீவைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கம்லூப்ஸ் நகருக்கு அருகிலுள்ள முன்னாள் குடியிருப்புப் பள்ளி ஒன்றின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள மேரிவல் இந்தியன் பழங்குடி சிறுவர்களுக்கான முன்னாள் குடியிருப்புக் பள்ளி வளாகத்தில் 751 மனித எச்சங்கள் கடந்த புதன்கிழைமை கண்டறியப்பட்டன. கனடாவில் இதுவரை கண்டறியப்பட்ட பழங்குடி குடியிருப்பு பள்ளி அடையாளப்படுத்தப்படாத மனிதப் புதைகுழிகளில் இது மிகப் பெரியதாகும்.

கனடாவில் பழங்குடியின சமூகங்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த துஷ்பிரயோகம் மற்றும் பாகுபாடுகளை இது நினைவூட்டுகிறது என பிரிட்டிஷ் கொலம்பியா கோவெஸ்ஸஸ் பழங்குடியின தலைவர் காட்மஸ் டெலோர்ம் கூறினார்.

கனடாவில் 19 ஆம் நூற்றாண்டு முதல் 1970 கள் வரை கனேடிய பழங்குடியின சிறுவர்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியிருப்பு பள்ளிகள் இருந்தன. இவற்றில் சுமார் 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் இணைய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய சொந்த மொழிகளைப் பேச குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பல பழங்குடியின குழந்தைகள் உடல், உள ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் 6,000குழந்தைகள் ரை இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கட்டமைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் 2008 இல் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியது. இந்தப் பள்ளிக் கட்டமைப்புக்களில் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் பரவலாக இருந்ததையும் கனேடிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

கனடாவின் முன்னாள் குடியிருப்பு பள்ளிகளில் பல மாணவர்கள் தங்கள் சொந்த மொழிகளைப் பேசியதற்காக தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். பெற்றோர் மற்றும் தங்கள் காலாசார அடையாளங்களில் இருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டனர். இதுவொரு கலாசார இனப்படுகொலை என விமர்சிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments