கறுப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் அமெரிக்க காவல்துறை பலமுறை துப்பாக்கி சூடு!!

You are currently viewing கறுப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் அமெரிக்க காவல்துறை பலமுறை துப்பாக்கி சூடு!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்தவரின் முதுகில் அமெரிக்க காவல்த்துறையினர் பலமுறை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.

நேற்றையதினம் கெனாஷா நகரில் உள்ளூர் பிரச்சினை தொடர்பாக ஜக்கப் பிளேக் (Jacob Blake) என்ற கறுப்பினத்தவரை காவல்த்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

தனது குழந்தைகள் இருந்த காரை திறந்து உள்ளே செல்ல முயன்ற பிளேக்கின் முதுகில் காவல்த்துறையினர் 7 முறை சுட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காணொளியொன்றும் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட காவல் உத்தியோகத்தரை கண்டித்தும், இன மற்றும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் போராட்டங்கள் மற்றும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டதுடன் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

கறுப்பினத்தவர் சுடப்பட்டமை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் காரணமாக கெனோஷா கவுண்டியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவர், ஜேக்கப் பிளேக் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இணையத்தில் வெளியான காணொளியில், கெனோஷாவில் ஒரு காரில் ஏற முயற்சிக்கும் போது பிளேக்கின் முதுகில் காவல்த்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது பதிவாகயுள்ளது.

காவல் தலைமையகத்தில் சம்பவதினமன்று இரவு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. எதிர்ப்பாளர்கள்”நாங்கள் பின்வாங்க மாட்டோம்”என்று கூச்சலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள