குடும்பப் பிணக்கில் ஜவர் படுகொலை! பிரான்சில் பயங்கரம்! தாக்குதலாளி கோமா நிலையில் மீட்பு!!

You are currently viewing குடும்பப் பிணக்கில் ஜவர் படுகொலை! பிரான்சில் பயங்கரம்! தாக்குதலாளி கோமா நிலையில் மீட்பு!!

குடும்பப் பிணக்குகள், வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை இன்று பட்டப்பகலில் பாரிஸ் புறநகரான Noisy-le-Sec (Seine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் ஈழப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிகிறது. 

 Rue Emmanuel Arago தெருவில் உள்ள  வீடொன்றில் உயிரிழந்தவர்களது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கி உள்ளார்  என்று கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து காவல்த்துறை அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த பொலீஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஜவர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு அருகே, கத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் நகர காவல்த்துறையினர் சம்பவம் நடந்த பகுதியை உடனடியாக மூடி வெளியாட்கள் செல்வதை தடுத்துள்ளனர். பேரூந்து மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள