கொரோனா நோய்க்கு மருந்து: தீவிர ஆராட்சியில் தாய்லாந்து!

  • Post author:
You are currently viewing கொரோனா நோய்க்கு மருந்து: தீவிர ஆராட்சியில் தாய்லாந்து!

இதுவரை 23 நாடுகளில் 151 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) திங்களன்று (இன்று) தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தாய்லாந்து பாங்காக்கில் உள்ள ராஜவிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் எச்.ஐ.வி(H.I.V)க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலவைகளை கொண்டு சிகிச்சையளித்ததில் அவரது உடல்நலம் நன்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.விக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றுடன் காய்ச்சல் எதிர்ப்பு மருந்து ஓசெல்டமிவிரை மருத்துவர்கள் இணைத்து இந்த சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக 12 மணிநேரத்தில் அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மருத்துவர்களின் இந்த சாதனை உலகம் முழுவதும் மக்களிடையே ஒரு சிறிய நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜவிதி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கிரியாங்ஸ்கா அட்டிபோர்ன்விச், இது வைரசுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு உறுதியான முறை அல்ல, ஆனால் இது நோயாளியின் நிலையை மேம்படுத்த உதவுகிறது.இந்த முறையை ஒரு நிலையான சிகிச்சையாகப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க மேலும் ஆய்வுகள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எச்.ஐ.வி நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்துவது குறித்து சீன அரசு சோதனை செய்து வருவதாக ஏபிவீ (AbbVie) என்ற மருந்து நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அமெரிக்காவின் வடக்கு சிகாகோவில் இயங்கி வரும் இந்த நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீன சுகாதாரத்துறை எச்.ஐ.வி.க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயன்படுத்துவது பற்றிய சோதனையில் ஈடுபட்டுள்ளது என கூறி இருந்தது.

பகிர்ந்துகொள்ள