சிங்கள இனவெறி அரசையும், பாஜக மோடி அரசையும் கண்டித்து வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

You are currently viewing சிங்கள இனவெறி அரசையும், பாஜக மோடி அரசையும் கண்டித்து வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினால் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” கடந்த ஜனவரி 18 ஆம் திகதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது சிறீலங்கா கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் தத்தளித்த மீனவர்களை, மற்ற மீனவர்கள் வந்து காப்பாற்ற விடாமல் தாக்கி விரட்டி அடித்தது.

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீது வாகன எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர். இறந்த 4 மீனவர்களின் உடல்கள் தற்போது சிறீலங்கா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனே தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து இங்கே உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும்.

லட்சக்கனங்காண ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு, இந்திய அரசு கொடுத்து வருகின்ற ஊக்கத்தினால் தமிழக மீனவர்களை தொடர்ந்து வேட்டையாடி கொன்று வருகின்றது. கடந்த 35 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, சிங்கள கடற்படை கொன்று இருக்கின்றது. இந்திய அரசை பற்றிய அச்சமோ கவலையோ துளியளவும் சிங்கள அரசுக்கு கிடையாது.

சிங்கள இனவெறி அரசையும், அவர்களை ஊக்குவித்து வருகின்ற இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திர மோடி அரசையும் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஜனவரி 25 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தோழமை கட்சி தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெருமளவில் திரண்டு வந்து கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள