சிறீலங்காவின் செயற்பாடு ஏமாற்றம்!

You are currently viewing சிறீலங்காவின் செயற்பாடு ஏமாற்றம்!

கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், 

பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமடைகிறது என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சின் நிபுணர் குழு முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே பாராளுமன்றத்திற்கு தெரிவித்த பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கையில் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்த ஒரு நாள் கழித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே இந்த அறிவிப்பினை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள