சிறீலங்காவுக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது!

You are currently viewing சிறீலங்காவுக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது!

இலங்கை இராணுவம் பாதுகாப்பு கருவிகளை  வாங்குவதற்கு இந்திய அரசு உதவ முன் வந்துள்ளதன் ஊடாக அங்குள்ள தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு உதவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதென  பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்திலேயே மேற்கண்டவாறு பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  “இலங்கை இராணுவத்துக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டொலர் நிதி வழங்கப் படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

இது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும். இந்த நிதியை ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்காக இலங்கை அரசு பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு அளித்த உறுதியை இலங்கை அரசு காப்பாற்றவில்லை. ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர் படுகொலை குறித்த போர்க்குற்ற விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்கவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கைக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன?

ஈழத்தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு குற்றவாளி. அத்தகைய நாட்டுக்கு இந்தியா 50 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவது போர்க் குற்றத்திற்கான வெகுமதியாகவே அமையும். எனவே, இலங்கைக்கு இந்தியா எந்த உதவியும் வழங்கக் கூடாது” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள