தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இணையங்களில் வாங்கும் நோர்வே இளையோர்கள்! நோர்வே சுங்கத்துறை கவலை!!

You are currently viewing தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இணையங்களில் வாங்கும் நோர்வே இளையோர்கள்! நோர்வே சுங்கத்துறை கவலை!!

மனிதர்களுக்கு காயங்களையும், உயிராபத்தையும் உண்டாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இணைய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து வாங்குவதில் நோர்வே இளையோர் ஆர்வம் காட்டி வருவதாக நோர்வே சுங்கத்துறை கவலை வெளியிட்டுள்ளது.

நோர்வே சுங்கத்துறையின் “ஒஸ்லோ” தளத்தில் மட்டும் நாளொன்றுக்கு 2.3. மில்லியன் என்ற கணக்கில், வெளிநாடுகளிலிருந்து நோர்வேக்குள் தபால் மூலம் அனுப்பப்படும் பொதிகள், கடிதங்கள் போன்றவை சுங்கத்துறை அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கும் நோர்வே சுங்கத்துறையை சேர்ந்த “Lars Teigen”, சாதாரணமாக நோர்வேயில் வாங்க முடியாத, தடை செய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து தருவிப்பதில் நோர்வே இளையோர்கள் அதிக ஆர்வம் கட்டி வருவதாக கவலை தெரிவித்துள்ளதோடு, இந்த இளையோர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் அக்கறையேதும் காட்டாமலிருப்பது வருத்தத்துக்குரியதெனவும் தெரிவித்துள்ளார்.

பார்வைக்கு சாதாரண பாவனைப்பொருட்களைப்போலவே தெரியும் இவற்றுக்குள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் மறைந்துள்ளதாகவும், இவ்வைகையான பொருட்கள் மனிதர்களுக்கு ஆபத்தான காயங்களையும், உயிராபத்தையும் விளைவிப்பதற்காக மாத்திரமே தயாரிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கும் “Lars Teigen”, பார்ப்பதற்கு சீப்பு, குமிழ்முனை பேனா போலவே தோற்றமளிக்கும் உருவங்களுக்குள் மறைக்கப்பட்ட கூரிய கத்தி மற்றும் மனித உடலில் சுமார் 50.000 – 60.000 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சக்கூடியதான, கைவிளக்கு (டோர்ச் லைட்) மற்றும் அலைபேசி போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான மின் செலுத்திகள் போன்றவையும் தம்மால் கண்டுபிடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இவ்வைகையான ஆபத்தான ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களையும் இணையத்தில் வாங்கி நோர்வேக்குள் தருவிக்கும் சமூகவிரோதிகள், அவற்றைக்கொண்டு தடைசெய்யப்பட்ட ஆயதங்களை இலகுவில் தயாரித்துக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கும் நோர்வே சுங்கத்துறை, இதுவிடயம் தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள