தமிழகத்தில் மோசடி!!

You are currently viewing தமிழகத்தில் மோசடி!!

முகநூலை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை சென்னை காவல்த்துறை அதிரடியாக கைது செய்தனர். தமிழக காவல்துறையினர்கள் மற்றும் பிற மாநில காவல்துறையினரின் பெயர்களில் போலியான முகநூல் கணக்கை சமுக வலைதளங்களில் துவங்கி அவர்களின் “நண்பர்களிடம் உதவி கேட்டு மோசடி செய்யும் குற்றச்செயலில் ” ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது.

இது தொடர்பாக பெருநகர சென்னை காவல் உதவி ஆணையாளர் அருள் சந்தோஷமுத்து அன்று அளித்த புகாரின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, கணினிவழிக் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, இதே போன்று போலி முகநூலில் கணக்கு துவங்கப்பட்டு தமிழக காவல் அலுவலர்களின் விவரத்தினை சேகரித்து எதிரிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய கும்பலானது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுக்காவிலிருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதே குற்றத்திற்காக முஸ்தகீன்கான் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய இரண்டு எதிரிகளுக்கு சென்னை வழக்கில் தொடர்பு உள்ளதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

எதிரி முஸ்தகீன்கானை அந்த மோசடி வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கையில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இதே போன்ற வழக்குகளில் தொடர்புள்ள மோசடி கும்பலின் தலைவனான எதிரி ஷகீல்கான் மற்றும் அவனுக்கு ஆதரவாக செயல்படும் ரவீந்தர்குமார் ஆகியோர் பற்றி தகவல் கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் தேன்மொழி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு, காவல் துணை ஆணையாளர் நாகஜோதியின் வழிகாட்டுதலின்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர்- சரவணக்குமார் தலைமையில் காவல் உதவி ஆணையாளர், கணினிவழிக்குற்றப்பிரிவு ரா. துரை, காவல் ஆய்வாளர், வினோத்குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்ட தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு எதிரிகளை வலைவீசி தேடிவந்தனர். அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த மோசடி கும்பலின் தலைவன் ஷகீல்கான் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ரவீந்தர்குமார் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஷகீல்கான் முகநூலில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை அவர்கள் பெயரிலேயே உருவாக்கி அதன் மூலம் பணம் மோசடி செய்யும் மூளையாக செயல்பட்டு, அவ்வாறு கிடைக்கும் பணத்தை ஏற்கனவே போலியாக உருவாக்கி வைத்திருக்கும் பல கூகுள்பே, பே.டி.எம் வங்கி கணக்குகளுக்கு மாற்றி பின்னர் அதை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இ-மித்ரா முகவரான ரவீந்தர்குமார் என்பவரின் ஸ்வைப் மிஷின் உதவியோடு எடுத்து தங்களுக்குள் பங்கிட்டு கொண்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள