தமிழின அழிப்புக்கு நீதி கோரி ,அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம்!

You are currently viewing தமிழின அழிப்புக்கு நீதி கோரி ,அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம்!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ,அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து (02.09.2022.) ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அரசியல் மையங்களின் கவனயீர்ப்பு போராட்டத்துடன் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவை நோக்கி நகர்கின்றது.

வரலாறுகளில் இருந்து மறைக்கமுடியாத எத்தனையோ வலி சுமந்த உரிமைகள் பறிக்கப்பட்ட பக்கங்களோடே தமிழினம் தன் விடுதலைப் போராட்ட பயணத்தைத் தொடர்கின்றது. இராசதானிகளாக, அரச இராட்சியங்களாக இருந்த தமிழர்களின் தனித்துவமான நாடு காலனித்துவ ஆக்கிரமிப்பினால் கூறுபோடப்பட்டு, எமது இறையாண்மை சிங்களப்பேரினவாத அரசிடம் அடைமானம் வைக்கப்பட்டபோதே நாம் இனவழிப்பிற்கு ஆளாகிவிட்டோம்.

தனிச்சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல், தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறை, படுகொலைகள், தமிழர் பாரம்பரிய நிலங்களில் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றம் தமிழர்களுக்கெதிரான சட்டங்கள் என தாங்கொணா இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று,இன்றும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து உணர்வெழுச்சியுடன் விடுதலை நோக்கி வீறுகொண்டு பயணிக்கின்றது.

2009ம் ஆண்டு கொடூரத்தனமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைச் சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்தி தமிழீழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்து ,வலிந்து காணாமல் ஆக்கியதோடு, ஏதுமற்ற அகதிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கி உணவு, மருந்து ஏதுமின்றி அடைக்கப்பட்ட நிலையில்,தமிழர்கள் நிற்கவோ நிலைக்கவோ கதியற்று அழிக்கப்பட்டதோடு புலம்பெயர்ந்து ஏதிலிகள் ஆனோம். இந்த நிலையிலிருந்து வெகுவிரைவாக தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் எமது தமிழீழ மண்ணை மீட்டு சுதந்திரமாக வாழ காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.

மறுபக்கத்தில் சிறீலங்கா அரசு தான் நடாத்திய தமிழினப்படுகொலை, போர்க்குற்றம், மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சில அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தனிப்பட்ட சில சுயநலவாதிகள், சில புலம்பெயர்தேசக் கைக்கூலிகள், சந்தர்ப்பவாதிகளைப் பயன்படுத்தியே ஐக்கிய நாடுகள் அவையின் குற்றச்சாட்டு மற்றும் அனைத்துலக விசாரணைகளிலிருந்து சிறீலங்கா அரசு தப்பிக்க முனைவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 2021ம் ஆண்டும் 2022 ம் ஆண்டு 50 ஆவது மனித உரிமக்கள் கூட்டத்தொடரிலும் மனித உரிமைகள் ஆணையாளார் மதிப்பிற்குரிய Michelle Bachelet அம்மையாரால் கூறப்பட்டதற்கு இணங்க ,சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை நடைமுறைப் படுத்த கோரியும் தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்பதை வலியுத்தியும் உரிமைக்குரல் எழுப்பி நீதிக்கான போராட்டமானது எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக் கிழமை அன்று Netharlands , Den hag ல் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பி.ப 01 மணிக்கு, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம் ஆரம்பமாக இருக்கின்றது.
தொடர்ந்தும்……
05.09.2022 திங்கட்கிழமை Belgium, Brussels ல் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகம் முன்றலில் பி.ப 13.30 மணிக்கும்

  • 12.09.2022 திங்கட்கிழமை அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு இறுதியாக
  • 19.09.2022 திங்கட் கிழமை Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்)
    பெரும் எழுச்சியோடு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று தமிழர்களின் நியாயமான போராட்டத்திற்கான தீர்வினை பறைசாற்ற இருக்கின்றது.
    எம் தமிழ் உறவுகளே!
    தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக வேறு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பின் பாதிப்பினை முறைப்பாடு செய்து எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் அதே வேளை தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
    “ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்”

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments