தமிழ்நாட்டு அழுத்தமே இந்த முடிவிற்கு காரணம்!!

You are currently viewing தமிழ்நாட்டு அழுத்தமே இந்த முடிவிற்கு காரணம்!!

தமிழ்நாட்டில் எழுந்துள்ள பெரும் எதிர்ப்பு அலைகள் காரணமாகவே தூபியை மீள அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தெரிவித்துள்ளார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபி  சிங்கள பேரினவாத அரசால் இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்திருப்பது தொடர்பாக   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சிறிசற்குணராசா அறிவித்திருந்தார் இதற்கு சாதகமான முடிவு எடுக்குமாறு என்னை இலங்கை அரசு பணித்திருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பதற்கு இன்று (11) திங்கட்கிழமை காலை துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார்.

அப்போது  சிங்கள  பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று துணைவேந்தரிடம் விசாரணை நடத்தினர். என்ன நடவடிக்கை இடம்பெறவுள்ளது? கட்டிடங்கள் அமைக்கப்போகின்றீர்களா? என கேள்விகளைத் தொடுத்தனர். 

இதற்கு பதிலளித்தபோதே துணைவேந்தர் மேற்கண்டவாறு கூறினார். 

தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக   தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது எனவும் இதையடுத்து இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்று நிலமைகளை விளங்கவைக்கவுள்ளனர் எனவும் துணைவேந்தர் மேலும் கூறினார். 

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை சாந்தப்படுத்துமாறு அரசு கூறியிருக்கின்றது. அதற்கு அமையவே நான் செயற்படுகின்றேன். கட்டிடம் அமைக்கப்படவில்லை. நினைவுகூரும் இடம் மட்டுமே அமைக்கப்படவுள்ளது எனவும் துணைவேந்தர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருந்தார். 

பகிர்ந்துகொள்ள