திங்கட்கிழமை போராட்டத்துக்கு மீனவர் சங்கங்கள் ஆதரவு!

You are currently viewing திங்கட்கிழமை போராட்டத்துக்கு மீனவர் சங்கங்கள் ஆதரவு!

மன்னார் மாவட்டம் முழுவதும் வரும் திங்கட்கிழமை பொது அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொள்ள இருக்கின்ற விழிப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக மீனவ சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம். தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்களாலும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெறும் கனிய வள மணல் அகழ்வு ஆய்வுக்காக இடம் பெறுவதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை 4000 துளைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது.

எனவே இவைகள் இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பாக மீனவ சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிக்காட்டிய போதும் இந்த செயற்பாட்டை எங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையே இதுவரை காணப்படுகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த வாரம் பிரஜைகள் குழுவினால் காற்றாலைக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தை முழுமைக்கும் விதமாக காற்றாலை மின் செயற்திட்டத்தை நிறுத்தி செயற்திட்டத்தை தீவுக்கு அப்பால் கொண்டு செல்லும் படி வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் ஒன்றுகூடி தீர்மானித்துள்ளோம்.

இந்த அடிப்படையில் மீனவ சமூகம் சார்ந்து அந்த மீனவ சமூகம் அன்றைய நாள் தங்கள் தொழில்களை நிறுத்தி இந்த பேரணிக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 25 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களையும் அழைத்து கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது.

இதற்கமைய அனைத்து சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் வருகின்ற 29 திகதி முழுமையாக கடற்றொழில் நிறுத்தப்பட்டு அனைத்து மீனவர்களின் பங்களிப்போடு இந்த அமைதியான கண்டன பேரணி மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெறும்.

இந்த போராட்டத்திற்கு கடல் சார்ந்த சமூகமும் ஏனைய பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செலுத்தி இந்த காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்திட்டம் ஆகிய இரண்டையும் மன்னார் தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து இன மக்களும் வழு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments