தேசத்தை நிமிர்த்திய தேசியத்தலைவனுக்கு அகவைநாள் வாழ்த்துக்கள்

You are currently viewing தேசத்தை நிமிர்த்திய தேசியத்தலைவனுக்கு அகவைநாள் வாழ்த்துக்கள்

உன்னால் புலரும் பூபாளம்

பாக்கு நீரிணையில்
கொந்தளித்த
அலையொன்று
வல்வையின் கரையினில்
பொங்கியெழுந்தது.

கார்த்திகை திங்களில்
எறித்த குளிர் நிலவொன்று
தமிழர் அகங்களை
நனைத்தது.

அடிநெஞ்சினில் மிதித்த
வஞ்சகர் வதை கண்டு
வெஞ்சினம் கொண்டது.

அஞ்சியொடுங்கிய இனத்தில்
முதல் சிறுத்தைப் புலியாகி
பாய்ந்தது.
கொண்ட கொள்கையில்
ஆலமரமாய் விழுதுகள்
எறிந்தது.

நஞ்சுமாலைக் கழுத்தோடு
பிஞ்சு மனங்களின் பிடிப்போடு
பஞ்சு வெடிப்பின் சிரிப்போடு
நெஞ்சு நிமிர்திய வீரநடையோடு
தலைவா நீ வருகையில்
கொஞ்சமும் பொறுக்கவில்லை
இஞ்சி தின்ற உலகிற்கு
தம்மை விஞ்சியதாய்
அஞ்சியே போயினர்.

சிறுபான்மை இனம்
சிற்றெறும்பாய் நசுங்கிவிடுமெனும்
அவதூறு விதைத்தவர்
பெரும்வீரன் படைகண்டு
துடை நடுங்கிப் போயினர்
துணை தேடி துணை தேடி
தூதுவர்களுக்கு
துதிபாடி மகிழ்ந்தனர்
இறுதியில்
எம்மின மக்களின்
குருதியில்
நீராடித்திளைத்தனர்.

ஆனாலும்
திறன் கொண்ட பார்வையும்
அறம் கொண்ட வழிநடத்தலும்
நேர் கொண்ட விழியசைவும்
பார் கொண்ட இனத்தில்
வேர் கொண்டு நிற்கிறது.

ஒருகாலம் எமக்காய்
புலரும் பூபாளம்
அதில் ஒளிரும்
கரிகாலன் மலர்வின்
பலன்.

தூயவன்

பகிர்ந்துகொள்ள