நோயாளி மரணமாகாமலே ஈரலை தானமாக எடுத்துக்கொண்ட மருத்துவர்கள்!

You are currently viewing நோயாளி மரணமாகாமலே ஈரலை தானமாக எடுத்துக்கொண்ட மருத்துவர்கள்!

ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்றுவிட்ட நோயாளியை, மரணமடைந்துவிட்டார் என தவறுதலாக நினைத்த மருத்துவர்கள், குறித்த நோயாளியின் ஈரலை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக எடுத்துக்கொண்ட சம்பவம், நோர்வேயின் வடபகுதியில் நடந்துள்ளது.

உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நோயாளி, சிகிச்சைகள் பலனளிக்காததால் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்றதால், அவர் “மருத்துவ ரீதியாக” மரணம் அடைந்துவிட்டார் என முடிவு செய்த மருத்துவர்கள் அவரது ஈரலை, இன்னொருவருக்கு பொருத்துவதற்காக அகற்றி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், ஒருவர் முற்றிலுமாக இறந்துவிட்டாரா என்பதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் “ஊடுகதிர்” பரிசோதனையில் எடுக்கப்படும் “ஊடுகதிர்” படங்களை தவறாக புரிந்துகொண்டதால், குறித்த நோயாளி மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் முடிவு செய்திருந்ததாகவும், இந்த பாரிய தவறை இன்னொரு மருத்துவரே கண்டறிந்ததாகவும் தெரிகிறது.

வைத்தியசாலை சட்டதிட்டங்களின்படி, ஒருவர் ஆழ்நிலை மயக்க நிலைக்கு சென்று, அவர் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்படுமானால், அவரது மூளைக்கு இரத்த ஓட்டம் இல்லாமல், மூளை சாவடைந்துவிட்டது என உறுதிப்படுத்தினால் மட்டுமே அவர் நூறு சதவிகிதம் மரணமடைந்துவிட்டார் என உறுதிப்படுத்த முடியும் என்றும், இதற்காக விசேட “ஊடுகதிர்” பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதும் சட்டவிதிகளாக இருக்கும் நிலையில், மாற்று அறுவை சிகிச்சை மூலம் சம்பந்தப்பட்ட நோயாளியின் ஈரலை எடுத்து, இன்னொருவருக்கு பொருத்தும் அவசரத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேற்படி சம்பவத்தை விசாரித்த அரசாங்கம், மேற்படி சம்பவம் நடந்ததாக கண்டறியப்பட்ட வைத்தியசாலை, சட்டவிதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனத்தெரிவித்திருக்கிறது. வைத்தியசாலை நிர்வாகமும் பொது மன்னிப்பு கோரியிருக்கிறது. 

பகிர்ந்துகொள்ள