பலாலி-சென்னை இடையே நாளாந்த விமான சேவை!

You are currently viewing பலாலி-சென்னை இடையே நாளாந்த விமான சேவை!

யாழ்ப்பாணம் – சென்னை இடையே இம்மாத இறுதியில் இருந்து நாளாந்த விமான சேவை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் நேற்று சந்தித்த பின்னர், நடந்த ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் அதிக வரியுடனான கட்டணம் அறவிடப்படும் குற்றச்சாட்டை பலாலி விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலிருந்து வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுகிறது.ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க, மத்தல) பயணி ஒருவரிடம் 60 டொலர் அறிவிடப்படுகிறது.

கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களிலிருந்து சென்னைக்கு புறப்படும் விமானங்கள் 150 பயணிகளுக்கு மேல் பயணிக்க முடியும்.

எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக 70 பயணிகள் பயணிக்கும் விமானே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் காரணமாக கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 வாரங்களுக்கு முன்னர் முற்பதிவு செய்து கொண்டால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்துக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகளவு கட்டணம் அறவிடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள