பேரன்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!!

You are currently viewing பேரன்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு அவசர வேண்டுகோள்!!

பேரன்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் அன்பான வேண்டுகோள்.


தமிழராக பிறந்தாலும் சிங்கள இன உணர்வோடு வாழ்ந்து வருபவர்தான் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள்.

2009 ம் ஆண்டு கொத்து கொத்தாக இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களால் படுகொலை செய்யப்பட்டபோது படுகொலையை எதிர்க்காமல் படுகொலையை ஆதரித்து சிங்கள அரசிற்கு துணை நின்றவர்தான் முத்தையா முரளிதரன் அவர்கள்.இலங்கையில் உள்ள தமிழர்களின் விடுதலைக்கு தங்கள் உயிரை தியாகம் செய்தவர்தான் தமிழீழ விடுதலை புலிகள் என்பதை தமிழர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் அறிவோம்.

விடுதலை புலிகள் தோற்கப்பட்ட நாள்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று பல பொது நிகழ்ச்சிகளில் பேசியவர்தான் முத்தையா முரளிதரன் அவர்கள்.தமிழர் என்ற உணர்வு இல்லாமல் இன்று வரை சிங்கள உணர்வோடு வாழ்ந்து வருகின்ற முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கப்படும் “800” என்னும் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ஏற்று நீங்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புகைப்படத்தை நீங்களே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது வருத்தமளிக்கிறது.

உங்களின் செயலை தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மிக வன்மையாக கண்டிக்கிறது.2009 ம் ஆண்டு போருக்கு பிறகுதான் இலங்கையில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று பதிவு செய்கின்ற தமிழின துரோகி முத்தையா முரளிதரனின் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் உங்களின் செயல் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

தமிழர்களின் உள்ளத்தில் நன்மதிப்பை பெற்றுள்ள நீங்கள் “800” திரைப்படத்தில் நடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.நீங்கள் கைவிடவில்லை என்றால் நாங்கள் உங்களை கைவிட வைப்போம். தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு எதிராகவும், உங்கள் படத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு கடுமையாக போராடும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.உங்களுக்கென்று நல்ல மதிப்பு தமிழகத்தில் உள்ளது என்பதை நீங்களே அறிவீர்கள்.நீங்கள் மிகவும் வறுமையான நிலையில் இருந்து சினிமா துறையில் படிப்படியாக முன்னேறியவர்.நீங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளோடு இணைந்து தமிழர்களின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறீர்கள்.பல்வேறு விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கையில் அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்துகின்றீர்கள்,உங்களின் ரசிகர் மன்றத்தை மக்களுக்கான மன்றமாக பல்வேறு உதவிகள் செய்து மாற்றி வருகிறீர்கள். உங்களின் ரசிகர்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கின்றீர்கள் என்ற இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்களால்தான் குறுகிய காலத்திலேயே மற்ற நடிகர்களை விட உங்களை அனைவராலும் அதிகம் ரசிக்க வைக்கிறது.உங்களின் கோடான கோடி ரசிகர்களில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பில் உள்ள பலரும் உங்கள் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.நானும் கூட உங்களின் ரசிகனாகத்தான் இருந்தேன்.ஆனால் அதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளாமல் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து உங்கள் மதிப்பையும், தரத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கூறிக்கொள்கின்றோம்.

திரையில் கிரிக்கெட் வீரனாக விளையாட வேண்டும் என்று தமிழர்களின் உணர்வோடு விளையாடும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் மாற்றிக்கொள்ள வைப்போம்.திரையில் இல்லாமல் இணையம் வழியாக திரைப்படத்தை வெளியிடலாம் என்று நீங்கள் நினைத்தால் இனி அடுத்தடுத்து உங்களில் நடிப்பில் வெளி வருகின்ற அனைத்து படத்திற்கும் எதிராக போராடுவோம்.குறிப்பாக நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நீங்கள் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளீர்கள் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.

800 திரைப்படத்தில் நடிப்பேன் என்று நீங்கள் முரண்டு பிடித்தால் மாஸ்டர் படமும் எதிர்க்கப்படும்.எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலக முடிவெடுங்கள். தேவையில்லாமல் உங்கள் சுயலாபத்திற்காக விரைவில் வெளிவர உள்ள நடிகர் விஜய் அவர்களின் படத்திற்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

நன்றி.

லயோலா_மணி
(ஒருங்கிணைப்பாளர்)
(தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு)

பகிர்ந்துகொள்ள