பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!

You are currently viewing பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நால்வரில் இரகுபதி ஷர்மா உள்ளடங்கலாக இருவர் ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்திருப்பதனால், இதுவரை அவர்கள் விடுதலைசெய்யப்படவில்லை.

மேலும் இருவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதனால் அதுகுறித்த உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியுள்ளதால் அவர்களது விடுதலையும் தாமதமடைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் அவர்கள் எண்மரும் நாளை தீபாவளி தினத்தன்று (24) விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பைச்சேர்ந்த வீரக்குமார் ராகுலன், இராமநாதன் நவதீபன், வவுனியாவைச்சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன் மற்றும் மன்னாரைச்சேர்ந்த ஜெபநேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சக்திவேல் இலங்கேஸ்வரன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் 23 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூவரும் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு தற்போது ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் அனைவரும் இன்னும் சிலகாலங்களில் விடுதலைசெய்யப்படவிருந்தவர்களாவர் என்று அரசியல்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும் தற்போது 8 தமிழ் அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 40 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments