பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம் – கஜேந்திரகுமார்!

You are currently viewing பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான நாடகமே காணாமல் போனோர் அலுவலகம் – கஜேந்திரகுமார்!

சிறிலங்காவின் நீதித்துறை நம்பகம் அற்றது. பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை புறம் தள்ளி எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு போதும் நீதியை பெற்றுத்தராது. பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச அழுத்தங்களில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட ஒரு அலங்காரமே இந்த காணமற்போனோரை கண்டறிவதற்கான அலுவலகமே தவிர, இவை நீதியை பெற்றுக்கொடுக்கப்போவது கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்த அலுவலகத்தின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பொறுப்புக்கூறலில் இம்மியளவும் முன்னேற்றத்தை காட்டாது ஆறு வருடங்களை கடந்த அரசு கடத்த முடிந்தமை இதற்கு ஒரு உதாரணமாகும் எனவும் அவா் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு மேற்கொள்ளப்படவுள்ள ‘நீதி விசாரணைக்கு உட்படுத்தல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான சட்டவிதிகள்’ ஆகிய திருத்தங்களை வரவேற்கிறேன். இவை முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் நடவடிக்கைகள் என்பதில் ஐயமில்லை. இங்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திரும்பத்திரும்பக் கூறியதுபோன்று, சொற்களில் மட்டும் வைத்துக்கொண்டிருக்காது , இவற்றை நடைமுறைப்படுத்துவதே மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். இதனை நீதியமைச்சர் முழுமையாக அறிவார் எனவும் நம்புகிறேன்.

இந்நாட்டில் இயற்றப்படும் சட்டங்கள் செயற்பாட்டுக்கு வராது, வெறுமனே பேச்சளவில் மட்டும் வைத்திருப்பது இந்த நாட்டின் ஒரு மரபாக மாறியிருக்கிறது. முன்பு அரசியல் யாப்பில் பதினேழாவது திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அப்போது வேறொருவர் ஜனாதிபதியாகவிருந்தார். அவர் இச்சட்டத் திருத்தத்தை கொண்டுவருவதில் தன்னை ஈடுபட்டிருந்தவராயிருந்தும் இந்நாட்டின் அதியுச்சமான சட்டத்தில், அதாவது அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட இத்திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை. அத்திருத்தத்தில் அரசியல் யாப்புக்கான சபை ஒன்று உருவாக்குவதாகவிருந்தது. இறுதியில் அது நிறைவேற்றபபடவில்லை. இப்படியாக , நிறைவேற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக இந்நாட்டில் உருவாக்கியிருக்கிற மரபு மிகவும் மோசமானது. இதன் காரணமாக இந்நாட்டின் நீதிபரிபாலன சேவையின் நம்பகத்தன்மையானது முற்றுமுழுதாக கேள்விக்குள்ளாகியுள்ளது.

இக்கருத்துகள் ஒருபுறம் இருக்க, காணமற்போனோரை கண்டறிவதற்கான பணியகம் தொடர்பில் எனது கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட 30-1 தீர்மானத்தின் விளைவாக காணமற்போனோரை கண்டறிவதற்கான பணியகமும், இழப்பீடுகள் வழங்குவதற்கான பணியகமும் அமைக்கப்பட்டன. இத்தீர்மானமானது முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டுடனேயே கொண்டுவரப்பட்டது இந்த 30-1 தீர்மானத்திற்கு உடன்பட்டதனை துரோகத்தனமான நகர்வு என தற்போதைய அரசாங்கம் கடுமையாக விமர்சித்துவருகின்ற அதே சமயம், மறுபுறத்தில், ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்துவருகின்ற நாங்கள், மேற்படி தீர்மானமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையில் துரோகமிழைத்துள்ளதாகவே கருதுகிறோம்.

ஒரு நாட்டின் பெயர் குறித்த தீர்மானமானது, அந்நாட்டில் பாரிய குற்றச்செயல்கள் நடைபெற்றுள்ளதனை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு பொறுப்புகூறலை உறுதிப்படுத்துதற்காகவே கொண்டுவரப்படுகிறது. உண்மையான அர்த்தத்தில், முன்னைய அரசாங்கமானது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, பொறுப்புக் கூறவைப்பதற்கான நெருக்குவாரத்திலிருந்து சிறிலங்காவைக் காப்பாற்றியிருக்கிறது.

பிரதான பிரச்சினைகளை திசைதிருப்பி, முக்கியத்துவமில்லாத உதிரியான விடயங்களை சொல்லளவில் மேற்கொள்ளுவதன் மூலம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது என்பதனைக் காட்டுவதற்காகவே இவற்றை முன்னைய அரசாங்கம் செய்தது. அவற்றில் ஒன்றுதான் இந்த காணாமற்போனோரை கண்டுபிடிப்பதற்கான பணியகம். இதுவிடயத்தில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள’ பேரவையிலும், ஐநா கட்டமைப்பிலும் ஒரு செயன்முறை இருக்கிறது. அதாவது, பொறுப்புக்கூறல் தொடர்பில் எவ்விதமான முடிவுகள் எடுக்கப்படினும் அவை பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தியாகவே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இச்செயன்முறையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஏnனில் பாதிக்கப்பட்டவர்கள் இச்செயன்முறையில் நம்பிக்கை கொள்ளாவிடின் அவர்கள் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களால் பல பரிந்துரைகள் முன்னைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டன. ஆனால் இப்பணியகத்தினை அமைக்கும்போது அவை எவற்றையும் முன்னைய அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இப்பணியகத்தின் நம்பகத்தன்மைபற்றித் திரும்பத் திரும்ப முறையிட்டுவந்தார்க்ள அவர்களால் முன்வைக்க்பட்ட முறைபாடுகளிலிருந்து சில விடயங்களை இங்கு சுட்டிக்கபட்டுகின்றேன். ‘இப்பணியகம் உருவாக்குவது தொடர்பான சட்டப்பிரிவு 13 இல் உபபிரிவு -2 இல் குறிபிடப்பட்டபடி இப்பணியகத்தினால் விசாரணைகளில் கண்டறியப்படுகிற எந்தவிடயமும், சிவில் மற்றும் குற்றவியல் வழக்குளில் பயன்படுத்தப்பட மாட்டாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணியகமானது நீதியை நிலை நாட்டும் என்று நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?’

‘இப்பணியத்தின் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர் விடயத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. இதில் அங்கத்துவம் வகிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் சிலர், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எந்த ஒருவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதனை அனுமதிக்க மாட்டோம் எனத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்கள்’ ‘நியமிக்கப்பட்ட ஏழு ஆணையாளர்களில் முன்னாள் மூத்த படையதிகாரியும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் சென்று எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்? அவரை இப்பொறுப்பிலிருந்து மேற்படி பணியகம் நீக்குமா?’

இவ்வாறு பலவிடயங்களை அவர்கள் பட்டியிலிட்டிருந்தார்கள். வடக்கு –கிழக்கில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இப்பணியகத்திலோ அல்லது இழப்பிடுகளை வழங்குவதற்காக அமைக்ப்பட்ட பணியகத்திலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் இவற்றை புறக்கணித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இப்பணியகத்திற்கு சென்று விசாரணைகளில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர் இத்தகைய பின்ணயிலேயே முன்னைய அரசாங்கம் இப்பணியகத்தை இந்நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள வைத்து உருவாக்கியது.

பொறப்புக்கூறல் விடயத்தில் சிறிதளவு முன்னேற்றமாவது ஏற்பட்டிருக்கிறது என்று சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்கு வெறுமனே சோடனைகளை செய்வதாக மட்டுமே அது உருவாக்கப்பட்டது. ஆதலால் இவற்றைக்காட்டி பொறுப்புக்கூறல் விடயத்தினை எவ்வித முன்னேற்றமுமின்றி ஆறுவருடங்களாக முன்னைய அரசாங்கத்தால் இழுத்துச் செல்ல முடிந்தது. இந்த அரசாங்கமும் மனிதவுரிமைச்சபையின் 30-1 தீர்மானத்தின் பிரகாரம் உருவாகக்கப்பட்ட மேற்படி இரண்டு பணியகங்களையும் வைத்திருக்க முனைவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்லை. போர் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களுக்கும் பின்னரும் சாதாரணமக்களுக்கு எதிராக இராணுவத்தினரால் பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டன என்பதனை புரிந்துகொள்ள முடியாதிருப்பது மிகவும் துன்பகரமான நிலைமை. தனது மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஒரு நாட்டின் கடமை. இராணுவத்தினர் இவ்வாறான குற்றச்செயல்களைச் செய்தருந்தால் அவர்கள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். இவ்வரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னார் இவ்வாறான குற்றச்செயல் நடைபெற்றதனை தெரிந்து வைத்துக்கொண்டும் நடவடிக்கையெடுக்க மறுத்து வருவது இந்த நாடு எவ்வாறான துன்பகரமான நிலையிலிருக்கிறது என்பதனை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்விதமான கலாச்சாரம் தொடருமானல் குற்றம் புரிபவர்கள் தண்டனைவிலக்குப் பெறுகிற ஒரு நிலையே உருவாகும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments