மகளை அணைக்க முடியாமல் தவித்த செவிலியர் : மகள் – தாய் பாசப்போராட்டம்!

  • Post author:
You are currently viewing மகளை அணைக்க முடியாமல் தவித்த செவிலியர் : மகள் – தாய் பாசப்போராட்டம்!

சீனாவில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு செவிலியர், தனது மகளிடம் தூரத்தில் இருந்து அணைத்து கொள்வது போல் கைகளை விரித்து பிரியாவிடை அளித்த காணொளி வேகமாக பரவி வருகிறது.

சீன அரசு செய்தி ஊடகமான ஷினுவா, டுவிட்டரில் வெளியிட்ட காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அந்த காணொளியில்,சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை ஒன்றின் வெளியே, பாதுகாப்பு உடைகள், முகமூடி அணிந்து கொண்டு ஒரு செவிலியர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் அவரது மகள் நிற்கிறார்.

அப்போது, மகள் அழுது கொண்டே, “அம்மா நான் உங்களை இழந்து வாடுகிறேன், சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள்” எனக்கூறுகிறார்.

அதற்கு செவிலியர், மகளுக்கு கூறிய ஆறுதலில் “அம்மா பெரிய அரக்கனை எதிர்த்து போராடுகிறேன்.கொரோனா வைரசை தோற்கடித்த பின்னர் தான் வீடு வந்து சேர்வேன்” என்று கூறுகிறார் தொடர்ந்து, தனது கையை தூக்கி அணைப்பது போல் சைகை செய்தார். பதிலுக்கு, சற்று தொலைவில் இருந்த மகளும் அவ்வாறே செய்தார்.

பின்னர், மகள் வீட்டில் இருந்து எடுத்து வந்த பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு, அழுதபடியே செல்கிறார். பின்னர், அந்த செவிலியர் வந்து, அதனை எடுத்து கொண்டு கையசைத்தபடி சென்றார். இதனை, சற்று தொலைவில் இருந்து சிறுமி அழுதபடியே பார்த்து கொண்டு நின்றார்.

இந்த காணொளியை சமூக வலைதளங்களில் பார்த்த ஏராளமானோர், உருக்கமான தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தாய்-மகள் இடையே நடந்த இந்த பாசப்போராட்டம் காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள