மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூரை மேல் ஏறிப் போராட்டம்!

  • Post author:
You are currently viewing மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூரை மேல் ஏறிப் போராட்டம்!

இன்று முற்பகல் வேளையில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறி 12க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறித்த சிறைக் கைதிகளின் போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சிறைச்சாலைக்கு வராவிட்டால் தாங்கள் கழுத்தினை அறுத்து தற்கொலை செய்யப்போவதாகவும் கூரையில் இருந்து குதிக்கப்போவதாகவும் போராட்டக்காரர்களான சிறைக் கைதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப் பகுதியில் பதற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள