மனித உரிமை மீறல் குற்றவாளிகள் மீது பயணத் தடை விதிக்குமாறு கனடாவின் எதிர்க்கட்சி கோரிக்கை!

You are currently viewing மனித உரிமை மீறல் குற்றவாளிகள் மீது பயணத் தடை விதிக்குமாறு கனடாவின் எதிர்க்கட்சி கோரிக்கை!

சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது பயணத்தடையை விதிக்குமாறு, கனடாவின் உத்தியோகபூர்வ எதிர் கட்சியான கன்சவேட்டிவ் கட்சி, கனேடிய அரசைக் கோரியுள்ளது.

கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை நடைமுறைப்படுத்துமாறும், கன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங்கும்,சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் கார்னட் ஜீனியசும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்ந்துள்ள அவர்கள் ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர் கனேடியப் பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை எனவும் கனேடிய எதிர்கட்சி கரிசனை வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ கொண்டிருக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் , கோரிக்கைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனேடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை மனித உரிமையை முன்னேற்ற தொழிற்படும் கனேடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையையும் கனேடிய எதிர்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள