மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 20 பேர் கைது!

  • Post author:
You are currently viewing மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 20 பேர் கைது!

கொரோனா பாதிப்பால் நேற்று மரணமடைந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

துயரம் தரும் செய்தியாக, சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் இயக்குநராக இருக்கும் 58 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சைப் பலனிறி நேற்று உயிரிழந்தார். அவரது உடலை புதைப்பதற்காக வேளங்காடு மயானத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து, அவசர ஊர்தியை உடைத்து ஓட்டுநர்களை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை தாக்கியதாக உடன் சென்று மருத்துவ்ர் பிரதீப் தெரிவித்தார். இரத்தம் சொட்ட சொட்ட தப்பித்தோம் பிழைத்தோம் என ஈகா திரையரங்கு வரை அவசர ஊர்தியை ஓட்டி வந்துள்ளனர். அதற்கு மேல் ஓட்டுநர்களால் ஓட்ட முடியாததால் படுகாயம் அடைந்த அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அந்த மருத்துவர் PPEபாதுகாப்பு ஆடையை தானே அணிந்து கொண்டு , உடனிருந்த இரண்டு உதவியாளர்களுடன் மீண்டும் வேளங்காடு மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் சில காவலர்கள் உதவியுடம் அவசரம் அவசரமாக மருத்துவரின் உடலைப் புதைத்துவிட்டு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், அவசர ஊர்தி மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை அண்ணா நகர் காவல்துறையினர் , இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாக தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள