மருந்து உண்டா? கிடையாதா? : கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing மருந்து உண்டா? கிடையாதா? : கொரோனா வைரஸ்!

இரண்டே வாரங்களில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 க்கும் மேலாக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்சில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 28 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக சீனா சுமார் 6 கோடி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. எங்கும் பயணிக்க முடியாத நிர்ப்பந்தத்தில் சீன மக்கள் அச்சத்துடன் வீடுகளில் ஒடுங்கி உள்ளனர். லட்சக்கணக்கான சீனர்கள் புத்தாண்டையொட்டி பயணம் மேற்கொண்டிருப்பதால் இந்த கொடிய தொற்று நோய் பல நாடுகளுக்குப் பரவி வருவதாக கூறப்படுகிறது.

சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஆன்டிவைரஸ் மருந்தை பரிசோதிக்க சீனா தொடங்கி உள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் கலந்துக் கொண்டார். அப்போது கொரோனோ வைரஸ் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாத ஆபத்தான நிலைக்கு போய் விட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

உலக நாடுகளின் ஒத்துழைப்போடு அதை முறியடிக்க வேண்டும் என்று கூறிய அவர் சட்டரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்றார். அவசர நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் உடல் நலம் தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இதனிடையே கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக சீன தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டது. இதேபோல் இங்கிலாந்தின் சில ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜஸாரிவிக், ஒரு புதிய நோய்க்கிருமிக்கு எதிராக மருந்துகள் அல்லது தடுப்பூசிகளை உருவாக்கி சோதிக்கும் செயல்முறை நிறைவேற பல ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  இதுவரை எந்த மருந்தும்  கண்டுபிடிக்கப்படவில்லை என்று அரசு எச்சரித்துள்ளது. எய்ட்சுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கலேட்ரா  என்ற மருந்து கொரோனோ வைரசுக்கும் பயன்படும் என்று கருதப்படுகிறது. ஆனால் அந்த மருந்தும் குறைந்த அளவே கையிருப்பு உள்ளதாக மருந்துக் கடைகள் தெரிவித்துள்ளன.

கூடுதலான மருந்தை விற்பனை செய்ய தயார் என அந்த மருந்தை உற்பத்திசெய்யும் சிகாகோ நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போதும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதற்கு உடனடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.

பெரும்பாலான நோயாளிகள் ஓரிரு வாரங்களுக்குப் பிறகே குணமடையக் கூடும் என்று சீனாவின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நோயாளிகளுக்கு இந்த கலேட்டா கொடுக்கப்பட்டு ஒரே நாளில் காய்ச்சல் குறைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சுயமாக சக்தி  மிக்க மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த, அமெரிக்க மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளன. இதற்காக இரவும் பகலும், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும், பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் 90 நாட்களில் தடுப்பு மருந்துகளின் பலன் தெரிய வரும் என, மருந்து ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
அமெரிக்க மருந்து நிறுவனமான கிலியட் தயாரித்த ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவிர் மருத்துவ பரிசோதனையில் சீனா நோயாளிகளை சேர்க்கத் தொடங்கி உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள