மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்!

You are currently viewing மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் 08, 09ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகக் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழுவில் மேஜர் ஜெனரல் ஜீவக ருவன் குலதுங்கவும் உள்ளடங்குகின்றார்.

அவர் கடந்த 2016 நவம்பர் 7 – 2017 ஜுலை 27 வரையான காலப்பகுதியில் ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகப் பங்கேற்றமை குறித்து எனது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றேன்.

பாலியல் வன்முறைகளும், தொடர்ச்சியான சித்திரவதைகளும் பதிவான ஜோசப் முகாமில் கடந்த 2016 நவம்பர் 7 – 2017 ஜுலை 27 வரையான காலப்பகுதியில் மேஜர் ஜெனரல் குலதுங்க கட்டளைத்தளபதியாகப் பணியாற்றினார். இக்காலப்பகுதியில் ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோரில் சிலர் இப்போது லண்டனில் வசிக்கும் நிலையில், அவர் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்றிருப்பது கடும் சினத்தைத் தோற்றுவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் உள்வாங்கப்படுவதை கவனிக்காமல் இருக்கமுடியாது. எனவே கடந்த 2016 ஆம் ஆண்டு சித்திவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் சிசிர மென்டிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டதைப்போன்று, இம்முறை குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் குறித்து கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments