மே}}}}}

You are currently viewing மே}}}}}

வலி நிறைந்த மாதம்!
நம் வழி தொலைந்த மாதம்!
விழி கலங்கி மனம் வெதும்பி
இனமே இருப்பழிய 
பலிகள் எடுத்த மாதம்!

நம்பிக்கைகள் தூர்ந்து
சிந்தையும் கலங்கி
சின்னாபின்னமாகி
சிதறிப்போன மாதம்!

பதறிப்போய் பரிதவித்து 
பாரே பார்த்திருக்க 
இனமழித்த மாதம்!
உலகே ஒருமித்து ஓரினத்தை
பழிதீர்த்த மாதம்!

கதறல்களும் குக்குரல்களும் 
அக்கடற்கரையோரம் அடங்கிப்போயின,
உடலங்கள் உருக்குலைந்து சிதறிப்போயின,

ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள்
அடித்த குண்டுகள் அள்ளிக் கொண்டு போயின,
ஆர்ப்பரித்த அலைகளும் அமைதி கொண்டன,

இரத்தமும் சதையுமாய் நிறைந்து
சிவந்து போனது நிலம்,
அந்த இடத்தில் நாதியற்றுப்போனது
நம் இனம், 

எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன, 
மொட்டுக்களும் மலராமல் கருகின, 
மரங்களும் வேரோடு எரிந்தன, 
எம்மவர் துயரமோ எல்லையற்று நீண்டது, 

இது சிவந்த மே! எம்மை சிதைத்த மே! 
கனத்த இதயத்துடன் கடந்து செல்ல முற்பட்டாலும் 

காலம் முழுவதுமே எம்மோடு மாறாத வடுவாய் தொடர்ந்திடு(ம்)மே!

அரவிந்

பேர்ன்
சுவிஸ் 

பகிர்ந்துகொள்ள