வடக்கின் பல இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் !!

You are currently viewing வடக்கின் பல இடங்களில் இராணுவ  சோதனை சாவடிகள் !!

வடக்கில் ஆனையிறவு, மாங்குளம்,புளியங்குளம் ,ஓமந்தை ஆகிய நான்கு இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

பயணிகள் பேருந்து முழுமையாக சோதனையிடப்படுவதுடன், கடந்த ஒரு வாரகாலமாக போர்காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்தில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றன. இதனால், பல்வேறு இடஞ்சல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

வன்னி பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிக்கு அடுத்தபடியாக புத்தூர்சந்தியில் 15கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனைசாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்ததாக 15கிலோமீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறக்கிவிடப்பட்டு வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களது பைகள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னர் ஏற்றப்படுகின்றனர். குறித்த நடவடிக்கையால் ஒரு சோதனை சாவடியில் 15 நிமிடத்திற்கும் அதிகமான தாமதம் ஏற்படுகின்றது.

கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும்போது நீண்டநேரம் எடுப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. குறித்த சோதனைகளின் மூலம் சில பேருந்துகளில் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கபட்டுவந்தாலும், பொதுமக்களை கடுமையாக அசௌகரியப்படுத்துவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள