வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை கொரோனா நிலையத்திற்கு!

You are currently viewing வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை கொரோனா நிலையத்திற்கு!

யாழ் – வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை கொரோனா அவசர நிலையின் போது பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை மீள திறப்பது சாத்தியமில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள