வட மாகாணத்துக்கு அன்டிஜன் பரிசோதனை தேவையற்றது!

You are currently viewing வட மாகாணத்துக்கு அன்டிஜன் பரிசோதனை தேவையற்றது!

வடக்கு மாகாணத்திற்கு தற்போதைய நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை போதுமானது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாகாணத்தில் தற்போதைய நிலைமையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் எமக்கு அன்டிஜன் பரிசோதனை தேவையற்றது எனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஏனைய மாகாணங்களில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. ஏனெனில் அந்த மாகாணங்களில் எமது மாகாணத்தை போல பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

அன்டிஜன் பரிசோதனையில் ஒரு சில நம்பிக்கையில்லா தன்மையும் காணப்படுகின்றன. அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று என காண்பிக்குமாயின் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் போது தொற்று இல்லை என காண்பிக்கும்.

அதேபோல் அன்டிஜன் சோதனையின் போது ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தியவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படும்.

எனவே அன்டிஜன் பரிசோதனை என்பது மிகவும் நம்பகரமான சோதனை முறை அல்ல. மேலும் வடக்கு மாகாணத்தில் போதியளவு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணமாக நாம் தற்போது அதைப் பற்றி பரிசீலிக்க தேவையில்லை.

அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து ஆனையிறவு மற்றும் பூநகரிப் பாதை ஊடாக வருவோருக்கு நாம் அதிகாலை வேளைகளில் பி.சி.ஆர் சோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தோருக்கு நாம் ஒவ்வொரு நாளும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள