2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் பல பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது
அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக 378 பேரும் வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் காயமடைந்தும் இறந்தும் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவும், முதியவர்களாகவும் இருந்தனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தவண்ணம் இருப்பதுடன் உண்மையான எண்ணிக்கையை கூட கணக்கிடமுடியாத அளவிற்கு குறுகிய நாட்களுள் பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித படுகொலையாகவும் அது மாறிவருவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு முன்னர் இந்தப்“ போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியதாலேயே வகை தொகையின்றி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்









