வவுனியாவில் ஒரே இரவில் மூன்று கடைகள் கொள்ளை!

You are currently viewing வவுனியாவில் ஒரே இரவில் மூன்று கடைகள் கொள்ளை!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் ஒரே இரவில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (16.08.2020) அதிகாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வழமை போன்று நேற்றையதினம் (15.08) சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வர்த்தக நிலையங்களை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் சென்றிருந்தனர். இன்று காலை குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த உரிமையாளர்கள் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளமையினையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் பொலிஸ் காவல் அரணிலிருந்து 100 மீற்றர் தொலைவில் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள இறுவட்டு விற்பனை நிலையம் , சிகையலங்கார நிலையம் என்பனவும் காவல் அரணிலிருந்து குருமன்காடு வீதியில் 100மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வர்ணபூச்சு விற்பனை நிலையமும் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் பூட்டினை உடைந்து உள்நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். .

இதேவேளை நேற்றுமுன்தினம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள