ஈரானின் தென்மேற்கு பகுதியில் 2026 ஏப்ரல் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க “F-15E Strike Eagle” போர் விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் சுமந்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணையால் (MANPADS) தாக்கப்பட்டிருக்கலாம் என, அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் இருந்து அறியப்படுவதாக, NBC News வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, விமானத்தைத் தாக்கிய ஆயுதம் சீன தயாரிப்பாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மேம்பட்ட போர் விமானங்களை கண்டறிய உதவும் ரேடார் தொழில்நுட்பத்தையும் சீனா ஈரானுக்கு வழங்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறித்த போர் விமானம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. விமானத்தில் இருந்த இரு பணியாளர்களும் அவசரமாக வெளியேறிய நிலையில், ஒருவர் விரைவாக மீட்கப்பட்டார்; மற்றொருவரை மீட்க பல மணி நேரங்கள் நீண்ட சிறப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள சீன தூதரக அதிகாரிகள், சீனா தனது ஆயுத ஏற்றுமதிகளை கடுமையான சட்டங்களின் கீழ் மட்டுமே மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த தகவல்கள் தற்போது பெயர் வெளியிடப்படாத ஆதாரங்கள் மற்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், சீன ஏவுகணையே விமானத்தை வீழ்த்தியது என்ற முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் NBC News தெரிவிக்கிறது.






