பஹல்காம் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள பாக்., துாதரகம் முன், இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பாக்., துாதரகம் முன், புலம்பெயர்ந்த இந்தியர்கள் அந்நாட்டுக்கு எதிராகவும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர், ‘பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்’ என, முழக்கமிட்டனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பாக்., துாதரகம் முன் குவிந்த பாகிஸ்தானியர்கள், தங்களது நாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையறிந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள், தம் துாதரகம் முன் அதிகளவில் கூடி, தம் நாட்டுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பஹல்காம் தாக்குதலை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இரு தரப்பும் ஒரே சமயத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதேவேளை
இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. மருத்துவ விசாவில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற (29ம் தேதி) உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டது.
அதேவேளை, இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் வசித்து வந்த இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. மேலும், இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் 30ம் தேதிக்குள் பாகிஸ்தான் திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 6 நாட்களில் பாகிஸ்தானில் இருந்து 1,000 இந்தியர்கள் வாகா எல்லை வழியாக வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து தற்போதுவரை 800 பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.