இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த இரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் அணு ஆற்றலுக்கு தேவையான யுரேனியம் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் இதை அழிவு சக்திக்காக பயன்படுத்த ஈரான் முயற்சித்து வருகிறது.
யுரேனியத்தை அணு ஆயுதமாக பயன்படுத்த அதை செறிவூட்டும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த முயற்சியில் ஈரானுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்பு தொடர்பான இரகசிய தகவல்களை ஈரான் உளவுத்துறை கைபற்றியுள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதில் கூறியுள்ளதாவது:
இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்பு மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் திட்டங்கள் குறித்த இரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள், காணொளிகள் , புகைப்பட கோப்புகள், கணினி வன்பொருள் தரவு சாதனங்கள் ஆகியவற்றை சேகரித்து ஈரான் உளவுத்துறை கைப்பற்றியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பின், இஸ்ரேல் இரு இளைஞர்களை ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையேயான போரின்போது, பல தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்ததோடு இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது